Saturday, May 2, 2009

கோமாளிகளின் காலம்!

அடிமைக் குல்லாவை அணிந்து கொண்டு இந்திய ராணுவத்துக்குத் தன் இனத்தைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் குலாம் நபி ஆசாத் அண்மையில் கருணாநிதியைச் சந்தித்தது எத்துணை பொருத்தமானது!

மஞ்சள் வணிகத்துக்கும் ஈரோட்டுக்குமுள்ள தொடர்பு மஞ்சள் துண்டு அணியும் கருணாநிதிக்கும் ஈரோட்டு நெடுஞ்சாலை பாதைக்கும் என்றால் மிகையன்று. மறைந்த நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதியின் இடத்தை நிரப்பக் கலைஞர் கருணாநிதி பொருத்தமானவரே!

சோனியா காந்தியைத் “தாயே“ என்று கெஞ்சியது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இழிவு செய்யும் செயல் என்பது தெரியாத அளவுக்குப் பச்சைக் குழந்தையாகவா மாறிவிட்டார்!

ஈழத் தமிழர்களுடன் தனக்குள்ள கணக்கைத் தீர்த்துக் கொள்ளத் திருட்டுத்தனமாக இந்திய ராணுவத்தை ஏவிய சோனியாவின் வஞ்சகத்தால் கொதித்தெழும் தமிழகத்தின் சினத்தை நீர்த்துப் போகச் செய்ய ஏழெட்டு மாதங்களாகக் கருணாநிதி செய்து வந்த கோமாளித்தனங்களுக்குக் கணக்கேது!

சென்னையில் கருணாநிதி “திடீர்“ உண்ணாவிரதம் உட்கார்ந்தால், படுத்தால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் அறிவித்த கோமாளித்தனம் வாக்காளர்களை எரிச்சலடையச் செய்ததே மிச்சம்!

காங்கிரஸ் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இந்திரா காந்தியையே கோமாளியாக்கத் தொடர்ந்து முனைகிறார். “இலங்கையின் இறையாண்மையில் இந்தியா எப்படித் தலையிட முடியும்" என்ற வாதத்தை அபிஷேக் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறாரே, வங்காள தேசம் உருவான வரலாறு எந்த நாட்டின் இறையாண்மையை ஊடுருவிய செயல் என்பது தெரியாதா? கருணாநிதியே ஒருமுறை வங்கதேச நிகழ்வை நினைவுபடுத்தியவர்தாம். பதவியைத் தக்க வைக்க நினைவாற்றலைத் தியாகம் செய்ய வேண்டிய பரிதாப நிலை!

குலாம் நபியிடம் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் குண்டு வீச்சு நடந்து பலர் இறந்துள்ளனரே என நிருபர்கள் கேட்டபோது “இதை அரசியல் லாபத்திற்காகச் சிலர் கூறுகிறார்கள். இலங்கையில் குண்டு போடுவதாக வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது“ என்று கூறியுள்ளார். ஆதாரம் வேண்டுமென்றால் குலாம் நபியின் மீது குண்டு விழவேண்டியதுதான்!

"சி என் என்", "டைம்ஸ் நவ்" போன்ற தொலைக்காட்சிகள் காட்டிய ஆதாரங்கள் போதாதா? திமிர்! அப்பட்டமான திமிர்! சென்னையில் நின்று கொண்டே இதைக் கூற அருகில் நிற்கும் சுதர்சனம் என்னும் கோமாளியும் ஒரு காரணம். “சீனாக்காரன்தான் இலங்கையில் போர் செய்கிறான்’’ என்ற சுதர்சனத்துக்கு அந்தோணியைக் கண்டால் அப்படியொரு பயம்!

கவிஞர் கனிமொழி தொலைக்காட்சியில் அதிகமாகவே தோன்றினார் கருணாநிதி உண்ணாவிரத நிகழ்ச்சியில். குலாம் நபி ஆசாத்-கருணாநிதி சந்திப்பின்போதும் கனிமொழி உடனிருந்தார். மாநிலங்களவை உறுப்பினரானதும் தம் முதல் பேச்சில் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து அளந்துவிட்டார். அபத்தமான வாதங்களை நாகரிகமான முறையில் ஜனகப்பிரியா என்னும் எழுத்தாளர் "காலச்சுவடு" என்ற இதழில் மறுத்து எழுதினார். கனிமொழிக்கு வந்ததே கோபம்! அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நூலகங்களில் "காலச்சுவடு" இடம்பெறக் கூடாதென ஆணை பிறப்பிக்கப்பட்டது! சீப்பை ஒளித்து வைக்கும் இந்த வேலை கோமாளித்தனமானது என்பது கருணாநிதிக்குத் தெரியாதா? தெரியும். எனினும் கையறு நிலையில் கருணாநிதி! குடும்பத்தில் அவர் செல்லாக்காசு!

ஈழப் பிரச்சினையில் தமிழகக் காங்கிரஸ்காரர்கள் கூசாமல் பொய் பேசி வருகின்றனர். கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சிதம்பரம் உறுதிமொழி தந்தாராம்! மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோருக்கு ஈழத் தமிழர்களை ஒழிக்கும் முக்கியமான வேலை இருப்பதால் சிதம்பரத்துக்குக் கோமாளி வேடம் கட்டிவிட்டார்கள்!

தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாணியில் 40 இடங்களையும் கைப்பற்றிவிடலாமெனக் கருணாநிதி அணிக்கு அழுத்தமான நம்பிக்கை. காங்கிரஸ் கோமாளிகளையும் அவர்களுக்குத் துணை நிற்கும் கருணாநிதி வகையறாக் கோமாளிகளையும் பார்த்துச் சிரிப்பதுடன் நின்று கொள்வதே அறிவுடைமை.

2 comments:

  1. தன் இனம் என்பதால் கொதிக்கும் ரத்தம் ஏன் அடுத்தவர்கள் என்றால் குளீர்ந்து விடுகிரது உதாரனம் முன்னால்வியட்னாம் இந்தியகாஸ்மீர் நெபால் பாலஸ்தீன் இப்படி எத்தனையோ!

    ReplyDelete
  2. ராஜவம்சன் அவர்களே, தன் இனத்திற்காக வெறுமனே கொதிப்பதென்பது வேறு, ஒரு இனத்திற்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் ஏவப்படும் வன்முறைக்கெதிராக கொதிப்பதென்பது வேறு... அந்த துடிப்பு கூட இல்லையென்றால் இதயம் துடிப்பதில் அர்த்தமில்லை...

    ReplyDelete