Sunday, May 3, 2009
ஒரு பானைச் சோற்றுக்கு...
கோபண்ணா “1987-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அந்த நாட்டோடு போட்டு, தமிழ்த் தாயகத்தில் தனி தமிழ் மாகாணமாக உருவாகவும், சிங்களவருக்கு இணையாக தமிளர்கள் வாழவும் ராஜீவ் காந்தி முயற்சி எடுத்தார்“ என்று கூறியுள்ளார்.
பிரச்சனை யார் யாருக்கிடையில்? ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்த ஒப்பந்தம் குறித்து எளிய உதாரணத்துடன் விளக்கினார். கணவன்-மனைவிக்கிடையே தகராறு என்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒப்பந்தம் போட்டு நடுவர் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும் "இருவரில் எவரேனும் மீறினால், மீறாதவருடன் நடுவர் இணைந்து மீறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கே நடுவர் கணவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மனைவியை மிரட்டுகிறார்".
இதைக் காட்டிலும் மிக எளிமையாக ராஜீவ் காந்தியின் முட்டாள்தனத்தை விளக்க முடியாது.
மேலும் கோபண்ணா கூறுகிறார்: "இன்றுகூட பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஆயுதத்தைப் போட்டு வந்தால் அதற்கான முயற்சியில் இந்தியா தலையிடத் தயார் என்று ப.சிதம்பரம் உள்பட அனைவரும் கூறிவிட்டனர். "தமிழ் ஈழம் சாத்தியமில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம்."
அட, நாசமாப் போற காங்கிரஸ்காரர்களா! ஆயுதத்தைப் போடச் சொல்ல நீங்கள் யார்? இந்திரா காந்தி ஆயுதம் தரவில்லையா? இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி அளிக்கவில்லையா?
"பங்களாதேஷ்" சாத்தியமானபோது தமிழ் ஈழம் ஏன் சாத்தியமில்லை?
ஆயுதத்தைக் கீழே போடுவது தற்கொலைக்குச் சமம் என்பது தெரியாதா?
"ப.சிதம்பரம் உட்பட" என்றால் என்ன பொருள்?
சீக்கியன் செருப்பு வீசத்தயங்கமாட்டான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த சிதம்பரத்துக்குத் தமிழன் செருப்பைத் தொடமாட்டான் என்ற எண்ணமா?
கோபண்ணாவுக்குத் தமிழன் என்ற உணர்வு இல்லாமலிருக்கலாம். ப.சிதம்பரம் அப்படியா?
நாற்புறமும் கடல் சூழ்ந்துள்ள ஒரு குட்டித் தீவுக்குள்ளிருந்து கொண்டு கொடூரமான சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு செல்வதும் போர்ப்பயிற்சி அளிப்பதும் சமகாலத் தமிழன் சாத்தியமாகியுள்ளது பெருமைக்குரிய விஷயமல்லவா?
முறத்தினால் புலியைத் துரத்தினாளே மறத்தி ஒருத்தி" என்ற பழங்கதைக்குப் பதிலாகப் போர்முனையில் நவீன ஆயுதங்களுடன் வீரப் பெண்கள் என்பதை இன்று ஈழந்தானே செயல்படுத்தியுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக வானூர்தியும் நீர்மூழ்கிக் கப்பலும் உள்ள போராளிக் குழு தமிழனுடையது என்ற பெருமை கோபண்ணாவுக்கு இல்லாதிருக்கலாம்; சிதம்பரத்தின் உள்மனசு பெருமிதம் கொள்ளாதிருக்குமா?
சோனியா கும்பலுக்குச் சேவகம் செஇவது தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களுக்குக் கேவலமாகத் தோன்றவில்லையா?
"புலிகள் தங்கள் சொந்த சகோதர அமைப்புகளையே காலி செய்தவர்கள்" என்னும் கோபண்ணா காங்கிரஸ் வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பே காங்கிரசில் தீவிரவாதிகளை ஓரங்கட்டியவர்கள் மிதவாதிகள். காந்தியின் அரசியல் நடவடிக்கைகளால் மனம் நொந்து வ.வு.சி. அரசியலைவிட்டே ஒதுங்கி மளிகைக்கடை வைக்கப் போனாரே, நினைவில் இருக்கிறதா?
சுதந்திரத்திற்காக மாற்று வழியில் போராடிய பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்றுமாறு நேருவும் சரோஜினி நாயுடுவும் காந்தியை மன்றாடிக் கெஞிக் கேட்டுக் கொண்டும் மறுத்தாரே காந்தி; அது எந்த வகையில் நியாயம்?
நேதாஜியின் வழியைப் புறக்கணித்த காந்தியின் அரசியல் வாரிசுகள் இன்றளவும் வரலாற்றில் இருட்டடிப்பு நடத்துவது தெரியாதா?
சோஷலிஸ்டுகளாகவும் கமூனிஸ்டுகளாகவும் சுதந்திரப் போராட்டத்தில் தியாகிகளாகத் தங்களை அழித்துக் கொள்ளத் தயாராக இருந்தவர்களை சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் நரவேட்டையாடியது மறந்துவிட்டதா?
காங்கிரஸ் செய்யாத படுகொலைகளா? காஷ்மீரில், நாகாலாந்தில், அஸ்ஸாமில், ஆந்திராவில், தமிழ்நாட்டில், இந்தியாவின் பிற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி காவல் துறையையும் ராணுவத்தையும் கொண்டு கொன்று குவித்த அப்பாவிகளின் எண்ணிக்கைக்கு அளவுண்டா?
கோபண்ணாவின் கோமாளித்தனத்துக்கு இன்னுமொரு சான்று: "புலிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக போர்னிறுத்த அறிவிப்பு வர வேண்டும். இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்."
வெட்கங்கெட்ட காங்கிரஸ்காரர்களே! நார்வே நாடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது மறந்து போனதா?
ராஜீவ் காந்தி போராளிகளை ஒடுக்க நினைத்ததோடு இந்திய அமைதிப்படை என்றபெயரில் ஈழத்தில் செய்த அட்டூழியங்களை உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
"தமிழ்நாடு" என்று சென்னை மாநிலப் பெயரை மாற்ற மறுத்த காங்கிரஸ்காரர்கள் இன்று கட்சியையும் மாநிலத்தையும் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரின் பாதங்களில் சமர்ப்பிக்கக் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் இழிநிலையிலிருந்து மீண்டால்தான் தமிழர்கள் என்று சொல்லும் தகுதி ஏற்பட வழியுண்டு.
Saturday, May 2, 2009
கோமாளிகளின் காலம்!
மஞ்சள் வணிகத்துக்கும் ஈரோட்டுக்குமுள்ள தொடர்பு மஞ்சள் துண்டு அணியும் கருணாநிதிக்கும் ஈரோட்டு நெடுஞ்சாலை பாதைக்கும் என்றால் மிகையன்று. மறைந்த நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதியின் இடத்தை நிரப்பக் கலைஞர் கருணாநிதி பொருத்தமானவரே!
சோனியா காந்தியைத் “தாயே“ என்று கெஞ்சியது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இழிவு செய்யும் செயல் என்பது தெரியாத அளவுக்குப் பச்சைக் குழந்தையாகவா மாறிவிட்டார்!
ஈழத் தமிழர்களுடன் தனக்குள்ள கணக்கைத் தீர்த்துக் கொள்ளத் திருட்டுத்தனமாக இந்திய ராணுவத்தை ஏவிய சோனியாவின் வஞ்சகத்தால் கொதித்தெழும் தமிழகத்தின் சினத்தை நீர்த்துப் போகச் செய்ய ஏழெட்டு மாதங்களாகக் கருணாநிதி செய்து வந்த கோமாளித்தனங்களுக்குக் கணக்கேது!
சென்னையில் கருணாநிதி “திடீர்“ உண்ணாவிரதம் உட்கார்ந்தால், படுத்தால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் அறிவித்த கோமாளித்தனம் வாக்காளர்களை எரிச்சலடையச் செய்ததே மிச்சம்!
காங்கிரஸ் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இந்திரா காந்தியையே கோமாளியாக்கத் தொடர்ந்து முனைகிறார். “இலங்கையின் இறையாண்மையில் இந்தியா எப்படித் தலையிட முடியும்" என்ற வாதத்தை அபிஷேக் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறாரே, வங்காள தேசம் உருவான வரலாறு எந்த நாட்டின் இறையாண்மையை ஊடுருவிய செயல் என்பது தெரியாதா? கருணாநிதியே ஒருமுறை வங்கதேச நிகழ்வை நினைவுபடுத்தியவர்தாம். பதவியைத் தக்க வைக்க நினைவாற்றலைத் தியாகம் செய்ய வேண்டிய பரிதாப நிலை!
குலாம் நபியிடம் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் குண்டு வீச்சு நடந்து பலர் இறந்துள்ளனரே என நிருபர்கள் கேட்டபோது “இதை அரசியல் லாபத்திற்காகச் சிலர் கூறுகிறார்கள். இலங்கையில் குண்டு போடுவதாக வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது“ என்று கூறியுள்ளார். ஆதாரம் வேண்டுமென்றால் குலாம் நபியின் மீது குண்டு விழவேண்டியதுதான்!
"சி என் என்", "டைம்ஸ் நவ்" போன்ற தொலைக்காட்சிகள் காட்டிய ஆதாரங்கள் போதாதா? திமிர்! அப்பட்டமான திமிர்! சென்னையில் நின்று கொண்டே இதைக் கூற அருகில் நிற்கும் சுதர்சனம் என்னும் கோமாளியும் ஒரு காரணம். “சீனாக்காரன்தான் இலங்கையில் போர் செய்கிறான்’’ என்ற சுதர்சனத்துக்கு அந்தோணியைக் கண்டால் அப்படியொரு பயம்!
கவிஞர் கனிமொழி தொலைக்காட்சியில் அதிகமாகவே தோன்றினார் கருணாநிதி உண்ணாவிரத நிகழ்ச்சியில். குலாம் நபி ஆசாத்-கருணாநிதி சந்திப்பின்போதும் கனிமொழி உடனிருந்தார். மாநிலங்களவை உறுப்பினரானதும் தம் முதல் பேச்சில் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து அளந்துவிட்டார். அபத்தமான வாதங்களை நாகரிகமான முறையில் ஜனகப்பிரியா என்னும் எழுத்தாளர் "காலச்சுவடு" என்ற இதழில் மறுத்து எழுதினார். கனிமொழிக்கு வந்ததே கோபம்! அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நூலகங்களில் "காலச்சுவடு" இடம்பெறக் கூடாதென ஆணை பிறப்பிக்கப்பட்டது! சீப்பை ஒளித்து வைக்கும் இந்த வேலை கோமாளித்தனமானது என்பது கருணாநிதிக்குத் தெரியாதா? தெரியும். எனினும் கையறு நிலையில் கருணாநிதி! குடும்பத்தில் அவர் செல்லாக்காசு!
ஈழப் பிரச்சினையில் தமிழகக் காங்கிரஸ்காரர்கள் கூசாமல் பொய் பேசி வருகின்றனர். கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சிதம்பரம் உறுதிமொழி தந்தாராம்! மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோருக்கு ஈழத் தமிழர்களை ஒழிக்கும் முக்கியமான வேலை இருப்பதால் சிதம்பரத்துக்குக் கோமாளி வேடம் கட்டிவிட்டார்கள்!
தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாணியில் 40 இடங்களையும் கைப்பற்றிவிடலாமெனக் கருணாநிதி அணிக்கு அழுத்தமான நம்பிக்கை. காங்கிரஸ் கோமாளிகளையும் அவர்களுக்குத் துணை நிற்கும் கருணாநிதி வகையறாக் கோமாளிகளையும் பார்த்துச் சிரிப்பதுடன் நின்று கொள்வதே அறிவுடைமை.
Monday, April 27, 2009
இந்திய - இத்தாலியக் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஒரு குடும்பம்!
இந்தக் குடும்பங்களின் துணையோடு ஈழ மண்ணில் விடுதலைப் போரை நசுக்கும் நாசகார ராஜபக்சே குடும்பம்!
உலகத் தமிழர்கள் ஒரே குடும்பமாகும் நாளில் தமிழ் மண்ணில் கால் பதிக்க அஞ்ச வேண்டும் மயிருக்கு வாதாடும் மன்மோகன்; தலைப்பாகைக்குள் ஜெயில்சிங் செருப்புத் துடைத்த நினைவு பத்திரமாக!
"சுதந்திர தமிழ்நாடே எங்கள் லட்சியம்" என்ற பதாகை தந்தை பெரியாரின் வாழ்நாளில் கடைசி ஊர்வலம் நடத்திய மதுரை மாநாட்டில் தமுக்கம் கலையரங்க மேடையை அணி செய்ததை கருணாநிதி மறைக்கிறார்.
துணிவுடைமை, அஞ்சாமை பெரியாரின் பிறவிச் சொத்துக்கள்.
திரை விழுந்தது!
கருணாநிதியின் சரணாகதிப் படலம் உச்சகட்டக் காட்சியுடன் முடிந்திருக்கிறது.
சிவகங்கைச் சீமையில் வோட்டுப் பொறுக்கச் சிதம்பரத்துக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ஈழப் போரை முன்னின்று நடத்தும் சோனியா கும்பல், கருணாநிதிக்குக் கண் துடைப்புக் காட்சி நடத்த உதவி செய்ததுடன் தன் பொறுப்பைக் கை கழுவிவிட்டது.
காங்கிரஸ் தரப்பின் அபிஷேக் சிங்வி இன்னும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்னும் திமிரில் "இறையாண்மை உள்ள ஒரு நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது" என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.
பாகிஸ்தானைப் பிளந்து வங்கதேசம் உருவாக இந்தியப் படையை அனுப்பிய இந்திரா காந்திக்கு "இறையாண்மை" என்றால் என்னவென்று தெரியாதெனக் கூறுகிறாரா?
சுதர்சனம் என்றொரு காங்கிரஸ்காரர் "சீனாதான் ஈழத்தில் போரை நடத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன்" என்று தமிழர்கள் அனைவர் காதிலும் பூ வைக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே சென்று கருணாநிதிக்கு ஆதரவாகச் சேலத்தில் உண்ணாவிரதம் நடத்தியிருக்கிறார்! சேலம் வாக்குகளைச் சேகரிக்க இப்படியோர் ஏமாற்று வேலை!
இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் ஆறாத ரணத்துடன் டைட்லர் விவகாரத்தில் செருப்பு வீச்சுக்குக் குனிந்து கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சீக்கியர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை சிதம்பரம். ஏறத்தாழ ஏழு மாதங்களாகப் பிரச்சனையை நீர்த்துப் போக வைக்க எல்லா வேலைகளையும் செய்த கருணாநிதியின் கடைசி முயற்சிதான் உண்ணாவிரத நாடகம்.
பிரணாப் முகர்ஜியும் அந்தோணியும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வசதியாகக் கால அவகாசம் வழங்கக் கருணாநிதி அரங்கேற்றிய காட்சிகளை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
சோனியா, பிரியங்கா, ராகுல் காந்திகளின் பழிவாங்கும் போக்குக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் கருணாநிதி உண்ணாநோன்பை நிறுத்தியதால் உயிர் பிழைத்திருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் அவருக்குப் பெருமை சேர்க்காது.
மரணம் நாட்டு விடுதலைக்காக என்று நிகழும்போது மாவீரன் இறவாப் புகழடைகிறான்.
ஆயுள் நீட்டிப்பு அவப் பெயருக்குக் காரணமாகும் அவலம் பரிதாபத்துக்குரியதுதான்!
Monday, March 23, 2009
வக்கற்ற வருண் காந்தி
உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாகப் பேசியது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாததல்லவே.
அவருடைய தந்தையின் மரணம் டில்லி சிம்மாசனத்துக்காக அடிமை வம்சக் காலத்திலிருந்தே நடந்து வந்த வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சி என்பதை உணர்ந்தவர்கள் மிக மிகக் குறைவனவர்களே!
அரசியல் கொலைகளை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கும் இளவல்களுக்குள்ள வலுவான பின்னணி வருண் காந்திக்கு இல்லைதான்.
இந்தியத் தாலியணிந்த இத்தாலியப் பெண்மணி பெற்ற செல்வாக்கு மேனகா காந்திக்கு வந்துவிடக் கூடாதென்ற சதியின் பிந்திய அங்கமே வருண் காந்தியை வாடி வாசலிலேயே மடக்கிவிடும் திட்டம்.
வேதாந்தி கருணாநிதியின் தலைக்குத் தங்கம் பரிசளிப்பதாக பேசியது காற்றோடு போச்சு!
சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பேருக்குப் பணம் கொடுத்தாராம் வருண் காந்தி.
கிடா வெட்டி விருந்து கொடுத்து இலைக்கு அடியில் கரன்சி வைக்க வக்கற்றுப் போன வருண் காந்தி அரசியலுக்கு வந்தது எவ்வளவு பெரிய தப்பு!
பாபர் மசூதியை இடித்தவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இடம் கொடுத்துள்ள இந்திய அரசியலமைச் சட்டம், குற்றவியல் சட்டம், தேர்தல் ஆணையம் அனைத்துமே வரிந்து கட்டிக்கொண்டு வருண் காந்தியின் மீது பாய முற்படுவதன் பின்னணியை நாம் சிந்திக்க மறந்தால் நாதியற்றவர்களின் தொகை நாடு முழுவதும் பெருகிவிடும்.
குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் இரண்டாவது "மனோகரா" தமிழ் நாட்டுடன் நின்றுவிடவில்லை என்பதையே வருண் காந்தி பிரச்சினை சுட்டிக் காட்டுகிறது.
Monday, March 16, 2009
அக்ரஹாரக் கொடி எது?
1967-ல் காங்கிரஸை, அதிலும் குறிப்பாகக் காமராஜரைத் தோற்கடித்த ராஜாஜியின் சுதந்திராக் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது.
"ஒரு கையால் பூணூலைப் பிடித்துக்கொண்டு மறு கையால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்" என்று பிராமணர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் ராஜாஜி.
அனாச்சாரமான கட்சிக்கு வாக்களிக்க நேர்ந்ததால் பூணூலின் புனிதம் கெட்டுவிடக் கூடாதென்று அப்படி ஓர் எச்சரிக்கை!
சுதந்திராக் கட்சியின் டாக்டர் ஹண்டோவைச் சட்டப் பேரவைத் தலைவராக்க மறுத்தார் அண்ணா. உடனே "தி.மு.க.வுடன் தேனிலவு முடிந்தது" என்று அறிவித்தார் ராஜாஜி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தம் கட்சியிலிருந்த நடிகர் விஜயகுமார் சபரிமலைக்கு மாலை போட்ட காரணத்தால் கட்சியைவிட்டு நீக்கினார்.
தமிழ்நாட்டுக்கு மூகாம்பிகை என்ற கடவுளைப் பின்னாளில் அறிமுகம் செய்தவரே எம்.ஜி.ஆர். தாம் என்பது எத்தகைய நகைமுரண்!
அண்ணாவுடன் பழகியவர்; அண்ணாவின் கொள்கைகளை நன்கு அறிந்தவர்; "திராவிட" என்ற சொல் கட்சியின் பெயரில் இடம் பெற்றுள்ள காரணத்தை உணர்ந்தவர்; "திராவிடம்" என்பதற்கு எதிரிடையான "ஆரியம்" என்பதை "ஆரியமாயை" நூலின் மூலம் தோலுரித்துக் காட்டியவர் அண்ணா என்பதை மறந்துவிட்டுத் தம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார் எம்.ஜி.ஆர்.!
நெருக்கடி நிலையின்போது கட்சியின் பெயருக்கு முன்னால் "அனைத்து இந்திய" என்ற சொற்களைச் சேர்த்த எம்.ஜி.ஆர். அதற்கான காரணத்தைக் காலம் வரும் போது சொல்வதாகக் கூறினார். இறுதிவரை அவர் கூறவுமில்லை; அதைக் கேட்குமளவு தைரியமுள்ள தொண்டர் எவரும் அந்தக் கட்சியில் இல்லை!
இதைச் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஜெயலலிதா கட்சியில் சேர்க்கப்பட்டபோது எவ்வித முணுமுணுப்பும் எழவில்லை என்பதற்கே.
தி.மு.க.விலிருந்து வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கும் யோசனை கூறி அதைச் செயல்படுத்தியவர்கள் 'தினமலர்' ராமசுப்பையர், 'இதயம் பேசுகிறது' மணியன், எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோர் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புத்த மதத்தின் வளர்ச்சியையும் வேத மதத்தின் வீழ்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் நேரடியாக எதிர்த்துப் பயனில்லை என உணர்ந்தார்கள். புதிய வழியொன்றைக் கண்டுபிடித்தனர். புத்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டோர் போன்று புத்த சங்கத்தில் ஏராளமான பார்ப்பனர்கள் சேர்ந்தனர். காலப் போக்கில் அதன் தலைமையைக் கைப்பற்றினர்!
அதன் விளைவு யாது? "கடவுளே இல்லை" என்று சொன்ன புத்தர் கடவுளாக்கப்பட்டார்! வரிசையாக உருவச்சிலைகள், கோயில்கள், வழிபாடு, கற்பனைக் கதைகள் என்று புத்தருடைய கொள்கைகளைப் புதைகுழிக்கு அனுப்பும் பணி தீவிரமானது.
வேத மதத்திற்கும் புத்த மதத்திற்கும் வேறுபாடுகள் மறைந்த நிலையில் புத்த மதம் நலிவுற்று; வேத மதம் தலை தூக்கியது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் அரங்கேறியுள்ளது.
சட்ட மன்றத்தில் "நான் பாப்பாத்திதான்" என்று ஜெயலலிதா "அண்ணா", "திராவிடம்" ஆகிய சொற்களை கட்சிப் பெயரிலும், அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் தாங்கியுள்ளது குறித்துச் சற்றேனும் அச்சமோ, நாணமோ கொள்ளாது அழுத்தமாகக் கூற முடிந்ததெனில் அது பரம்பரைப் பண்பு.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அணிகள் பிரிந்த சமயம் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு பிராமணர் சங்கம் பத்திகையில் விளம்பரம் வெளியிட்டது.
கோயில் வழிபாடு, யாகங்கள், புனித நீராடல், தீர்த்த யாத்திரை என்று ஜெயலலிதா அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபட்டதால் "தாங்கள் இன்னது செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்" கட்சியிலுள்ள ஆண்களும் பெண்களும் காவடி எடுப்பது, அலகு குத்துவது என்று அனைத்து மூட நம்பிக்கைகளுக்கும் புத்துயிரூட்டி வருகின்றனர்.
அக்ரஹாரத்தில் பறக்கும் அ.இ.அ.தி.மு.க. கொடிகள் அண்ணாவை ஒழித்துக் கட்டிய வெற்றியை முரசறைவன.
வடநாட்டில் மாயாவதி பேசும் மேடையில் தலைவர்கள் பலருடைய படங்களுடன் பெரியார் படமும் உள்ளது.
அண்ணாவை விழுங்கிய ஜெயலலிதாவை அடுத்துப் பெரியாரை விழுங்கப் புறப்பட்டுள்ளார் ராமசுப்பிரமணியம்.
"சரித்திர ரீதியாக பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் மோதல் வந்ததில்லை. அவர்கள் உடல் உழைப்பும் இவர்களின் மூளை உழைப்புமே இந்த மண்னையும் மக்களையும் வளப்படுத்தி நெறிப்படுத்தியிருக்கின்றன" என்ற ராமசுப்பிரமணியத்தின் கூற்று அகம்பாவத்தின் அடையாளம் என்றால் பிழையில்லை.
உடல் உழைப்பு X மூளை உழைப்பு
தமிழர்கள் தூங்குகிறார்களா, இல்லையா என்று சோதித்துப் பார்க்க அவ்வப்போது திமிர்த்தனமான இப்படிப்பட்ட ஒப்பீடு எழும்.
பாம்பு சிறிதாக இருந்தாலும் கம்பு பெரிதாக இருப்பதில் தவறில்லை. எம்.ஜி.ஆர். செய்த தவற்றின் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். திராவிடக் கட்சிகள் சொரணையோடு நடக்க முற்பட்டால் அக்ரஹாரத்தில் பா.ஜ.க. கொடி மட்டுமே பறப்பது பொருத்தமாக இருக்கும்.
தோழர்களே! அண்ணாவைப் பார்ப்பனப் பிடியிலிருந்து மீட்க வேண்டிய கடமையுடன் பெரியாரையும் இழந்து விடாதிருக்கும் பொறுப்பும் நமக்குள்ளது. இது மிகைக் கூற்றல்ல. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தின்போது என் போன்றோரின் கருத்து எவர் சிந்தனையிலும் பதியவில்லை. இப்போதாவது புரிந்து கொள்வது நன்று. ராமசுப்பிரமணியம் போட்டுள்ள நச்சு விதையைக் கண்டுகொள்ளாதிருப்பது அக்ரஹாரங்களின் அதிகாரம் இன்னும் வெளிப்படையாகக் கோலோச்ச வழிவகுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
Sunday, March 15, 2009
தமிழனின் தனிக் கொடி
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தால்தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். ('தினத்தந்தி' - 15-3-௨009)
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது சிறந்த யோசனை போன்றும் கூடுதல் அக்கறையுடன் கூறப்பட்டது போன்றும் தோன்றும். ஆனால் இது நாம் நிரந்தரமான மடையர்கள் என்ற அவருடைய எண்ணத்தை மெய்ப்பிக்கும் வாசகமாகும். "இலங்கை அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு" என்பதை மீண்டும் மீண்டும் பலர் கூறி வருகின்றனர்.
கேலிக்கூத்தின் சிகரமாக 09.03.2009-ல் உண்ணா நோன்பிருந்த ஜெயலலிதா "இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஈழப் பிரச்சனை குறித்து எவ்வித அக்கறையுமின்றி "விடுதலைப் புலிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்" என்று வீர வசனம் பேசியவாறு வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரைப் 'பொடா'வில் பதம் பார்த்தவர் அம்மையார்.
தா.பாண்டியன், வைகோ ஆகியோருடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் புலிகளுக்கு எதிரான கருத்தை முற்றிலும் மாற்றிக் கொள்ளத் தயங்கியபடி உளறிக் கொட்டியுள்ளார் ஜெயலலிதா.
இலங்கையின் அரசிலமைப்புச் சட்டத்தின்படி அந்நாடு இந்தியாவைப் போன்று ஒற்றையாட்சித் தன்மை கொண்டது. தலைநகர் கொழும்பு, தீவு முழுமைக்குமான ஆணைகளைப் பிறப்பிக்கும் வல்லமை உடையது. டில்லிக்கு அடங்கி நடக்க வேண்டிய இந்தியத் தமிழர்களாகிய நம் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கும் தீர்மானம் நிறைவேறினாலும் (அவ்வாறு நிகழ எவ்வித வாய்ப்புமில்லை) பொதுமக்களின் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற வேண்டும்!
ஜெயலலிதாவுக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவர் சந்தித்த மிகப் பெரிய இழப்பு ராஜீவ் காந்தி கொலையால் ஏற்பட்டதாகும்.
பழி வாங்கும் உணர்வில் சோனியா காந்திக்குத் தாம் எவ்வகையிலும் குறைந்தவர் அல்லர் என்பதை வெளிப்படுத்தத் தணியாத ஆர்வம் கொண்டவர்.
பிரணாப் முகர்ஜிக்குத் தெரிந்தாலும் இந்தியத் தமிழர்களை ஏய்ப்பதற்காகப் பொய் பேசுகிறார்.
இந்த விஷயத்தைத் தோழர் தியாகு மிக எளிதான உதாரணத்துடன் விளக்குவார். காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு கன்னட மக்களின் பெரும்பான்மைக் கருத்துப்படியே என்பது போல என்று!
"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன்"என்று எம். எம். மாரியப்பா உணர்ச்சி பொங்கப் பாடிய பாடலில், "தமிழனுக்கென தனிக் கொடியொன்றைத் தந்து மகிழடா தமிழா!"என உரத்து முழங்கிய வரி இன்றும் உயிரோட்டம் நிறைந்ததாகவே உள்ளதை உலகத் தமிழர்கள் உணரும்போது வரலாறு திரும்பும்; வாய்மை அரும்பும்!
Wednesday, March 4, 2009
உண்மையின் மறுபக்கம்
"பிரிட்டிஷ்" அரசு நம்மை ஆளும் வரை மொழிவாரி மாநிலங்கள் இல்லை, எனவே, மொழியோ அல்லது தமிழினமான உணர்வோ அரசியலில் ஒரு பகுதியாக இருப்பதற்கான சாத்தியமும் தேவையும் இருக்கவில்லை," என்ற கட்டுரையாளாரின் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இறையாண்மையுள்ள ஒற்றை நாடு அல்லது அரசு அல்லது மாநிலங்கள் கிடையாது, 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகும் தனிப்படை, தனிக்கொடி, தனி நாணயம் கொண்ட ஐநுற்றுக்கும் மேற்பட்ட சுதந்திரமான, சுயேச்சையான சுதேச சமஸ்தானங்கள் இருந்தன என்பதே உண்மை.
சர்தார் படேலின் நடவடிக்கைகளால் ஒற்றை ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்ட நிலப்பகுதிகளை இந்தியா என்ற நாட்டுடன் இணைத்த காலத்தில் மொழிவழி மாநிலங்கள் என எப்பகுதியும் காண முடியாது.
“1935க்குப் பிறகு, வெள்ளையருக்கு எதிராக தேசியவாதமே அரசியலின் கூற்றாக இருந்தது; இனமான உணர்வு இல்லை” என்பதும் பொருத்தமற்றதாகும்.
அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி இனமான உணர்வுடன்தான் செயல்பட்டது, பின்னாளில் திராவிடர் கழகமாக மாறியது.
சுதந்திரத்திற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சி ராஜக்ஜப் தலைமையில் நடந்தபோது இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தாளமுத்து. நடராசன் வீர மரணம் எய்தியது வரலாறு அல்லவா?
ஜின்னாவின் பாகிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை இந்திய தேசியவாதத்துக்கு எதிரானது அல்லவா?
“1950ஆம் ஆண்டு அரசியல் சட்டம் வந்து இநதியக் கூட்டாட்சியில் மொழிவாரி மாநிலமாகத் தமிழகம் மாறியவுடன், திராவிட முன்னேற்றக் கழகம் ‘தமிழ் மொழி’ உணர்வைத் தூண்டியதால் ஆட்சியைப் பிடித்தது” என்பது வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.
1950ல் சென்னை மாகாணத்துடன் ஆந்திரம் இணைந்திருந்தது, தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாநிலம் கோக்ப். பொட்டி ஸ்ரிராமுலு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததையொட்டி ஏற்பட்ட கலவரங்களுக்குப் பிறகே ஆந்திரம் தனி மாநிலமாயிற்று.
வாஞ்சி கமிசனை மத்திய அரசு அமைத்தது, அதன் பரிந்துரைகளின் பேரில் மொழிவழி மாநிலங்கள் உருவாயின. இரட்டை மொழி பேசும் பம்பாய் மாகாணம், மகாராஷ்டிரம், குஜராத் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதை எதிர்த்துக் காங்கிரஸ்காரரான மொரார்ஜி தேசாய் உண்ணா நோன்பிருந்தார். எனினும் மக்களின் விருப்பப்படி இரு மாநிலங்கள் மொழிவழி உருவாயின.
“தமிழ் உணர்வில் அவர்கள்,(காங்கிரஸார்) எந்த வகையிலும் கழகத்தினருக்குப் பின் தங்கியவர்கள் அல்ல” என்ற கட்டுரையாளாரின் கூற்றை ஆய்வோம்.
ஆந்திரர்கள் “மதராஸ் நமதே!" என்று வலுவாக முழங்கிய காலத்தில் ம.பொ.சி. எல்லைப் போராட்டத்தை நடத்தித் திருத்தணி தமிழகத்துடன் இணைய வழியேற்படுத்தினார்.
மார்க்ஷல் நேசமணியின போராட்டத்தால் கேரளாவுடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நமக்குக் கிடைத்தது.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி அண்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் காமராஜரோ ‘குளமாவது மேடாவது’ என்று கேலி பேசினார்.
சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியபின் நம் மாநிலத்துக்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர்மாற்றம் செய்யத் தி,மு,க, கோரியது.
விருதுநகரில் சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்.
தமிழக காங்கிரஸ் அரசு, பெயர் மாற்றத்துக்கு இணங்கவில்லை. ’Madras State’ என்றால் யாருக்கும் தொரியாது என ஓங்கிக் கூறினர் அமைச்சர்களான சி,சுப்பிரமணியமும், பக்தவத்சலமும்.
ஆப்பிரிக்க நாடான "கோல்டு கோஸ்ட்" சுதந்திரம் பெற்றதுமே ‘கானா’ எனப் பெயர் மாற்றியது உட்படப் பல சான்றுகளைக் கூறியும் காங்கிரஸ் மறுத்தது.
இதில் என்ன வேடிக்கையெனில் சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வமான பெயர் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி!’
கேரளா, ஆந்திரப்பிரதேஸ்க், கர்நாடகா என்று சுற்றிலுமுள்ள மாநிலங்கள் மொழிவழி, இனவழிபெயர்களை சூட்டியுள்ளபோது வீம்புக்காகத் தமிழ்நாடு என மாற்ற மறுத்ததன் பலனை இன்றுவரை அனுபவித்தும் இலங்கைத் தமிழர்கள் விக்ஷயத்தில் இன்னும் புத்தி வரவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கை சென்று சாதித்தது என்ன?
“இந்தியத் தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தலையிட்ட இந்தியாவை அவமானப்படுத்தித் திரும்பச் செய்த சாரித்திரத்தைத் தமிழினத் தலைவர்கள் சௌகரியமாய் மறந்துவிட்டார்கள்” என்கிறஆர் கட்டுரையாளர்.
ராஜீவ் காந்தியை ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளச் சொன்னது யார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பிடுங்கிப் போடச் சொன்ன இந்தியத் தமிழர்களில் எவர் பெயரையாவது கூற முடியுமா?
ஜெயவர்த்தனேவிடம் ஏமாந்து கூலிப்படையாக ‘இந்திய அமைதிப் படை’ என்ற போர்வையில் சென்ற இந்திய ராணுவம் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்தும், வயது வேறுபாடின்றித் தமிழச்சிகளை வன்புணர்ச்சி செய்ததும், தமிழர்களின் சொத்துக்களை நாசப்படுத்திக் கொள்ளையடித்ததும் உண்மை அல்லவா?
இந்திய அமைதிப் படையில் முதன்முதலாகச் சென்ற கூர்க்காப் படைப் பிரிவினர் தாங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இந்துக்களான தமிழர்கல் என்று அறிந்த மறுகணமே போராட மறுத்துத் தாயகம் திரும்பியது உண்மையா, இல்லையா?
“ராமதாஸ், வைகோ, திருமாவளவன், கருணாநிதி உள்பட அனைவருக்கும் சர்வதேச சட்டத்தின் கட்டுபாடுகளுக்கு உள்பட்டு இந்தியா இதில் எந்த வகையிலும் தலையிடமுடியாது என்று தொரியும்" எனக் கூறும் கட்டுரையாளர், இந்திராகாந்தியை அறிவிலி எனக் கருதுகிறாரா?
கிழக்குப் பாகிஸ்தானில் 'இனப்படுகொலை' நடப்பதாகப் பறையறைந்து, 'முக்திவாகினி' என்னும் போராளிக் குழுவுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் தந்து, இறுதியில் பகிங்கரமாகப் போர் அறிவிப்புச் செய்து இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேசம் மலரச் செய்தாரே அவரைச் "சர்வதேசச் சட்டத்தின் கட்டுபாடுகள்" தடுத்தனவா?
சாதாரணமான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் போரை நிறுத்தும்படி சொல்லத் தமிழக முதலமைச்சருக்கு ஒரு மாதகாலம் பிடிக்கிறது.
ஆனால், பாசில் ராஜபக்க்ஷ, மகிந்த ராஜபக்க்ஷ, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்க என்று சிங்களத் தலைவர்கள் எவர் வேண்டுமாயினும் பிரணாப் முகர்ஜியை எளிதில் சந்தித்து ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்ட உதவிகள் பெற முடிகிறது.
“இருந்தும் தேர்தலுக்கு 'தமிழின பாசிச உணர்வு' உதவும் என்பதற்காக” என எழுதும் கட்டுரையாளர் ஈழ மண்ணில் ராஜ பக்க்ஷவின் கொடூரச் செயல்களையும் அவருக்கு உதவும் மத்திய அரசின் இனப்படுகொலை ஆதரவுச் செயல்களையும் 'பாசிச உணர்வு' கொண்டவை என்று கூற ஏன் மறுக்கிறார்?
ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் சர்வதேசச் சட்டங்களை மீறிப் படுகொலை நிகழ்த்தும் சோனியா காந்தி, மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் போன்ற பாசிஸ்ட்டுகளை உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் தொலைவில் இல்லை.
